Wednesday, September 5, 2012

"நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்"

பாடல் :
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
 குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் 
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் 
 குருடும் குருடும் குழிவிழும் ஆறே" 

பொருள் :  
மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார்.
அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர் .
அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும். 
இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப் 
பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர். 
குருட்டாட்டம் என்பது சிறு  பிள்ளைகள் தம் கண்ணைத் 
துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள 
பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல். 

Monday, September 3, 2012

"அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்"

பாடல் :
"முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
 அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்
 மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
 சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா  றெங்ங்னே"

பொருள் :
முகத்தில் அமைந்த கண்களைக்கொண்டு பார்க்கின்ற
மூடர்களே! அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது .
மனக் கண்ணால் பார்க்கிறபோதுதான் யோகக்காட்சியின்
இன்பம் தோன்றும் .தாய் தன் கணவனோடு கலந்து
இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன்னியாக உள்ள
தன் மகட்குக் கூற முடியுமா? முடியாதன்றோ?.

                                 "ஓம் திருமூல சித்த தேவாய நம"

Sunday, September 2, 2012

"அச்சமில்லை அச்சமில்லை"

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"

இச்சகத்து ளோரெலாம்
   எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

துச்சமாக எண்ணிநம்மைத்
   தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
   பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
   அச்சமென்பத் தில்லையே.

இச்சைகொண்ட பொருளெலாம்
   இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர்
   கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

நச்சைவாயி லேகொணர்ந்து
   நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

பச்சையூ னியைந்தவேற்
   படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து
   வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

" எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா,
              யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்".

"ஓம் சுப்பிரமணிய பாரதியார் தேவாய நம"


Wednesday, August 29, 2012

"தியானமே கடவுளைக் காணும் வழி "

பாடல்:
"எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும் 
 கண்ணால் அமுதினைக் கண்டறி வார் இல்லை 
 உண்ணாடி யுள்ளே  ஒளியுற நோக்கினால் 
 கண்ணாடி போலக் கலந்திருந் தானே ".

பொருள்:
எண்ணாயிரம் வருட காலம் யோகத்தில் இருந்தாலும்
அமுதமாம் சிவனைக் கண்ணாரக் கண்டவர்  இலர் .
ஆனால் உள்நாடியாகிய சுழுமுனை நாடியில் ஒளி
வடிவாகத் தியானிக்கின்  கண்ணாடியின் ஒளி
போலத் தியானிப்பவருடன்  கலந்து  இறைவன் இருப்பன் .

எண்ணாயிரம்  என்பது  பல ஆண்டுகள் என்னும் பொருள்  
தரும் நிலையில் உள்ளது . இறைவன் இன்பவடிவினன் .
ஆதலின் அவனை அமுது எனறனர், யோகநிலையில் 
இருந்தால் மட்டும் போதாது . உள்நாட்டத்துடன்
இருக்கவேண்டும் ,என்பது கூறப்படுகிறது .
இதனால் இறைவன் நினைவின்றி எதைசெய்யினும்
பயன் இல்லை என்றனர் .
                                                   "ஓம் திருமூலர் தேவாய நம"

Thursday, August 23, 2012

"ஞான வாக்கியம்"

"ஏழுவகைத் தோற்றமும் அழிதல் நிச்சயமே ".         
ஏழுவகையான பிறப்புகளும் அழிதல் உறுதியாகும்.

"ஐம்புல நுகர்ச்சியில் பம்பும் அக்கன்மம் ".
ஐம்புலன்களின் மூலம் போகங்களை அனுபவிப்பதால்
அவ் வினைகள் வளரும்.

"ஏறு கன்மங்கள் காறு அறு பிறவி".
வளரும் வினைகள் அளவற்ற பிறப்புகளை உண்டாக்கும்.

"இளமை விவேகி பின் தளர்வறும் யோகியே". 
இளமையில் பொய் எது மெய் எது எனப் பகுத்தறிவோர்
 பிற்காலத்தில் திடமான யோகியாவார்.

"அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே".
தூக்கம்  குறைந்தால் மனம் சத்துவகுணத்திற் செல்லும்.

"கண்டப் பொருள் அறிகண்  துப்பு இலதே".
உருவப்பொருள்களை அறியும்கண் அறிவிலாச் சடம்.

"காணாப் பொருளைக் காண்கன்  மெய்க்கண்".
தூலக்கண்காணாப் பொருளைக் காணும்கண்  ஞானக்கண்.

"குருஅருள் இன்றி அருள் வரல் இன்றே".
குருவின்  அருள்  இல்லாமல்  இறை  அருள்  வருவதில்லை.

"கெடுதியாவது வடுவு உடை இச்சை".
குற்றமுள்ள ஆசையே  கேடு  எனப்படும்.

"கோட்டை ஆவது மாட்சிமை மோனம்".
சிறந்த  மௌனமே  ஒருவனக்கு  அரண்  ஆகும்.

"சகமே மறையும் அகம் முகம் அழுந்தின் ".
மனம் அடங்கினால் உலகமே மறைந்துவிடும் .

"சித்தி விரும்பார் முத்தி வரம்போர்". 
முத்திபெறும்  குறிக்கோளுடையார்  சித்துகளை  விரும்பார் .

"சுக  வழிபாடு பகிர்முகம் அன்று". 
முத்திக்குரிய வழிபாடு புறப்பூசையால் அன்று .

"சோர்வு படாது அருளார் சிவ ஆக்கம்".    
அருள் நிறைந்த  சிவனை நினைத்து வாழும் வாழ்வு கெடாது .

"ஞேகிழ்தல் மயங்கல் அகல முயல்க". 
தவத்தின் போது  சோர்தலும் மயங்கலும் நீங்க  முயல்க.

"தன்னை அறிதல் தவத்தில் தவமே". 
தான் யார் என்று அறிதலே தவத்தில் சிறந்த தவம் ஆகும் .

"நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்". 
பசித்தால் மட்டும் உண்ணத்தக்க உணவைத் தேர்ந்து உண்க.

"நெருப்பைப் போலக் கருத்தனை நினைக".
கடவுளை நெருப்பைப் போலக் கருதுக.

"பீடை தருமே மூடர் உறவு". 
மூடருடைய உறவு துன்பம் தரும்.

"புயல்போல் மறைக்கினும் வெயிலவன் போல்நில்". 
மேகம்போல் மறைத்தாலும் சூரியன்போல் நிற்பாயாக.

"பூரணம் ஆம்வரை  தாரணை  நீங்கேல்". 
ஒருபொருளில் மனம் நிலைபெறுவது முழுமையாகும்வரை
அச்செயலைவிட்டு நீங்காதே.     

"பெருஞ்சுவை  ஊண்இன்று அருந்துக சிறுக". 
வித விதமான பெரிய சுவை உணவுகளின்றிச் சாதாரண
உணவைச் சிறிதளவு உண்க.

"பேசா  நாட்கள்  பிறவா நாட்கள் ".
மௌன நாட்களே பிறவாமைக்கு ஏதுவான நாட்கள்.

"பொன்மண்  ஆசை  மண்மண்  ஆகும்". 
பொன் ஆசையும் மண் ஆசையும் உள்ள உயிர்  அழியும்.

"முன்வினை ஒழிவில் தன்நிலை தெரியும்". 
பலவினை ஒழியும்போது உயிர் தன் இயல்பை அறியும்.

"வானம் போலத் தியானம் செய்யே". 
மனத்தை வானம் போலத்தூய்மையுடனும்
அசையாமலும் வைத்துக்கொண்டு தியானம் செய்வாயாக .

"வினை எது புரியினும் அனகனை  மறவேல்". 
எந்த செயல் செய்தாலும் இறைவனை மறவாதே

"வெல்லுக வெளியில் செல்லும் மனத்தை". 
வெளியில் செல்லும் மனத்தைச் செல்லவிடாமல்
வெல்வாயாக.   

                               "ஓம் குமரகுருதாச குருப்யோ நம"  

  



Wednesday, August 8, 2012

"கருமமே கண்ணாயிரு"

பாடல்:
"மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்;
 கண்துஞ்சார் எவ்வெவர்  தீமையும் மேற்கொள்ளார்;
 செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
 'கருமமே கண்ணாயிரு'.

விளக்கம்:
எடுத்த செயலை முடிப்பதில் (அல்) குறிக்கோளை
அடைவதில் கருத்தாய் உள்ளவர்கள்,  தம் உடலுக்கு
ஏற்படும் வருத்தத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்; 
பசியை மறப்பார்கள் ;மிகுதியாக உறங்க மாட்டார்கள் ;
பிறர் செய்யும் தீமையைப் பொருட்படுத்தமாட்டார்கள் ; 
வேளா வேளைக்கு இதைச் செய்யவேண்டும் ,
அதை செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்
கொண்டிருக்க  மாட்டார்கள்; பிறரால் ஏற்படும்
அவமதிப்பையும்  பொருட்படுத்தமாட்டர்கள்.

- குமர குருபர அடிகளார் (நீதிநெறி விளக்கம்)
 

Thursday, July 26, 2012

"சிவபோகசாரம் "

"அவரவர்  வினைவழி  அவரவர்   வந்தனர் 
அவரவர்  வினைவழி  அவரவர் அனுபவம் 
எவரெவர்க்  குதவினர்  எவரெவர்க்  குதவிலர்
தவரவர்  நினைவது  தமையுர்  வதுவே ". 

"நீதியிலா  மன்னர்  இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார்  செய்தவமும் பூரணமாஞ் - சோதி 
கழலறியா ஆசானுங்  கற்பிலருஞ் சுத்த 
விழலெனவே  நீத்து  விடு ".

   "ஒம்சிவசித்தர்கள்திருவடிகள்போற்றி" 



Wednesday, February 29, 2012

"அகத்தீசனிடம் - எனது இந்தப் பிறவி வேண்டுதல்"

"ஈ என்று நான் ஒருவ ரிடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம் ஒருவர் ஈது
இடுஎன்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்".
                                                                                        "ஓம் அகத்தீசாய நம"  

Tuesday, February 7, 2012

"வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்

நல்லோர் மனத்தை -  நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங்  கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து  நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை  கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச்  செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு   செய்வோர்க்கு - உளவு  சொன்னேனோ!
பொருளை  இச்சித்துப்  - பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப்  பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ  விட்டேனோ!
கலங்கி  யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக்  கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி  நிற்போரைக் - கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை  சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க  அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை  உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ  மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் -  பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் - தாழ்வு  சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் -  தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந்  தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.

"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"    
      
   

Tuesday, January 24, 2012

"சைவ நாயன்மார்களின் ஆதிசிவ மந்திரம்"

பல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பழக்கத்தில் இருந்துவரும் 
ஆதிசிவ மந்திரம்  இது.

 "சிவாய நம ஓம்
  சிவாய சிவ ஓம் 
  சிவாய வசி ஓம்
  சிவ சிவ சிவ ஓம்".

"ஓம் சிவ சித்தர்கள் திருவடிகள் போற்றி".

Friday, January 13, 2012

"பூஜித்தால் பெருமைக்குரிய 'அகத்தியரை' பூஜிக்க வேண்டும்" - மகான் கொங்கண மகரிஷி

"அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
 அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை  ஈவார்
 அகத்தியரே காஷாய வேட மீவார்
 அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
 அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
 யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
 அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
 ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே"

"ஓம்  கொங்கண மகரிஷி திருவடிகள் போற்றி"..