Tuesday, May 3, 2011

பசியின் கொடுமையை பற்றிய "ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகளின் - கூற்று"

"ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்"
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது-
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது - அது மழுங்கவே குணங்களெல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி
கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் 
அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது -
பூதங்களெல்லாம்புழங்குகின்றன -வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது , காது
கும்மென்று செவிபடுகின்றது - நா உலர்ந்து வரளுகின்றது-
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது -கை கால் சோர்ந்து 
துவளுகின்றன - மல சல வழி வெதும்புகின்றது,-
மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன-
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள்
கருகிப் பூட்டுகள்  நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது - வயிறு  பகீரென்று எரிகின்றது .
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது
உண்டு - பசிநீங்க நீங்குகின்றன.  அப்பொழுது
தத்துவங்களெல்லாம் தளைத்தது -உள்ளம் குளிர்ந்து,
அறிவு விளங்கி , அகத்திலும் முகத்திலும்
ஜீவகளையும் கடவுள் களையுந்துளம்பி ஒப்பில்லாத
திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட
இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
எந்த புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? 
எல்லாத் தெய்வங்களுக்கும்மேலாகிய கடவுள் 
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால்-
ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை 
என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த
வேதனையே பசிவேதனை என்றும் ;
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற
எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத
மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி
இன்பம் என்றும் அறியப்படும்.
             "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

3 comments:

  1. அன்புள்ள சக்கரவர்த்தி ஐயா ,

    பசியின் துன்பத்தை பற்றிய அருமையான விளக்கத்தை இதன் பதிவின்

    மூலம் தெரிந்து கொண்டேன் .

    பசி துன்பம் என்பது அது நமக்கு உணராத வரைக்கும் தான்.

    உங்கள் பணி என்றும் தொடர வாழ்த்தும் ....

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா.

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  3. யார் குரு? sagakalvi.blogspot.com/2012/01/blog-post.html

    ReplyDelete