Tuesday, February 7, 2012

"வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்

நல்லோர் மனத்தை -  நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங்  கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து  நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை  கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச்  செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு   செய்வோர்க்கு - உளவு  சொன்னேனோ!
பொருளை  இச்சித்துப்  - பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப்  பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ  விட்டேனோ!
கலங்கி  யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக்  கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி  நிற்போரைக் - கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை  சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க  அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை  உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ  மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் -  பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் - தாழ்வு  சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் -  தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந்  தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.

"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"    
      
   

No comments:

Post a Comment